Tuesday, February 6, 2007

எதிர்த்து விண்டுவது டோண்டுவிற்குத் தகுமோ?

2005ம் ஆண்டு ஒரு நாள் யூரோப்பா கண்டத்திலுள்ள அரசியல், சமூக, மதத் தலைவர்கள் எல்லாம் நாட்ஸி அடையாளங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்கள். காரணம்: ஆங்கில அரச பரம்பரையின் மூன்றாவது வாரிசாக அறியப்படுகின்ற இளவரசர் ஹாரி ஒரு வினோத ஆடை அணியும் நிகழ்ச்சி ஒன்றில் நாட்ஸி அடையாளங்கள் கொண்ட ஆடையை அணிந்தது.

எந்த ஜெர்மன் நாட்டினரால் அது பெரிதாக மதிக்கப்பட்டதோ, அதே ஜெர்மன் நாட்டவராலேயே அது தற்போது அருவருக்கப்படுகின்றது. ஏனெனில், எது நன்மை செய்யும் என்று நினைத்து ஆதரிக்கப்பெற்றதோ, அது மிகக் கொடுமையான நிகழ்வுகளைச் செய்ததுதான்.

ஒரு சமூகம் அல்லது ஒரு தனிமனிதன் கலாச்சாரம் உள்ளவனாகின்றான் என்பதற்குத் தோன்றும் பதில், எப்போது அந்தத் தனிமனிதன் தவறுகளை தவறுகள் என்று உணர்ந்து அதனினும் மேலேறிச் செல்லும் செயல்களில் ஈடுபடுகின்றானோ அப்போதே அவன் கலாச்சாரம் அடைகிறான் என்பதே. இறுகிய கற்பனைக் கருத்துக்களிலிருந்து ஒரு சமுதாயம் விடுபட்டு எப்போது முன்னேற்றத்தின் குழைவினால் மலர்ச் செடிகளை வளரவைக்கிறதோ அச்சமுதாயம் உயர்ந்ததாகின்றது. ஜெர்மானியர்கள் நாட்ஸி எதிர்ப்பினால் தங்களை உயர்வுபடச் செய்துவருவது உதாரணத்திற்கு ஒன்று. மனித வளத்திற்கு எதிரானதை ஒதுக்கிவிட்டு உயர்வது கலாச்சாரத்தின் அளவுகோல்.

ஆயினும் தன்னுடைய கருத்து என்பதாலோ அல்லது இறுதி உண்மை என்று அறிவுறுத்தப்படுவதாலேயோ ஒன்றை அப்படியே விடாமல் நம்பவேண்டும் என்பதை தன்னம்பிக்கையின் அடையாளமாய், அறச்சீற்றமாய் காண்பிக்கும் ஆவலை மனிதர்களிடையே காணலாம். வலைப்பதியும் மாந்தரிடத்தில் இது புரையோடிப்போயிருக்கும் புண். ஆகச் சிறந்த உதாரணங்கள் அனுதினமும் வருகையில் கால வெளியின் அருகில் உதாரணத்திற்கு அமைபவர் திருவாளர். டோண்டு ராகவன் அவர்கள்.

எந்த ஜாதி வெறியை ஹிந்து சமுதாயத்தின் இழிவாக எம் அண்ணல் அம்பேத்கார் "பார்ப்பனீயம்" என்கின்ற அடையாளப் பெயரால் அழிக்கத் துடித்தாரோ, அந்த வார்த்தைக்கு வடிவு கொடுக்க வந்திருப்பவராக தோன்றுபவர் இந்த "ராகவ ஐயங்கார்". கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை? அறிந்தால் அவமானம் ஹிந்து மதப் பெரியோர்களுக்கு. கோபுரம் ஏறி கூக்குரலாய் மகாமந்திரம் உபதேசித்த ராமானுஜன் நாணுகிறான். கலப்பு மணம் பிரச்சினைகள் கொண்டதாம். பிரச்சினைகள் இல்லாதது ஏதேனும் உண்டா? பெரும் புகழ் எடுக்கும் விருப்பத்தால் பிரச்சினைகள் எழாதா?

ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.

கலப்பு மணம் பிரச்சினைகள் உள்ளது எனும் இம்முதியவர், அந்தண ஆண்டாள் ஆயனை மணம் புரிந்ததை எதிர்ப்பாரா? ஆயன் என்பதால் வணக்கமில்லை. எம் தெய்வம் அந்த மகர நெடுங்குழைக்காதனன்றி வேறில்லை என்பீரெனில், அந்த திருமால் தங்கையின் கணவன் சுடுகாட்டில் அலையும் சூத்திரன் அன்றோ?

ஒரு வேளை உம்போன்ற ஐயங்காரால் நடாத்தப்பெறும் பெயரளவில் ஹிந்துவாய் உள்ள பத்திரிக்கையில் திருமால் தன் தங்கைக்கு வரன் வேண்டாத வேதனையோ உமக்கு?

தூணில் தோன்றிய நரசிம்மம் என்ன சாதியெனத் தெரிந்தா திரு மணந்தாள்?

வராகமாய் வளர்ந்து நின்ற அந்த வைணவன் என்ன சாதி?

தேவர்க்கு அமுது தர தன் தேகத்தைத் தந்த அந்த ஆமை என்ன சாதி?

அத்தனை சாதியிலும் அரியின் காதலர் அனைவரும் வைணவரே என்று பறையரையும், பள்ளரையும் பார்ப்பனராக்கியதில் உண்டானதன்றோ ஐயங்கார் எனும் குலம்? உமது மரபணுக்களில் இந்தச் சூத்திரர்களின் ஜீன் சுருண்டுள்ளதென்பது சுகமான உண்மையன்றோ?

கற்பென்பது கற்பனை என்பீர். ஆயினும் கலப்பு மணம் எனில் கடினம் கடினம் என்கிறீர். அடுக்குமா?

பதிலாய், "இது எம் சொந்தக் குரல். வைணவத்தின் கூற்றை வெளியிட அடியேனுக்கு பாத்தியம் இல்லை" என்பீர். தனி மனிதரின் குரல் ஒரு சமூகத்தின் தவறிற்கு ஆதரவாகும்போதும் அது தனிமனிதக் குரலாகுமோ? அப்படியே ஆயினும் உம் குரலை ஊருக்கு முன் உரத்துச் சொல்லல் அவசியம் ஏனோ? உமக்கு மட்டும் கேட்கும்வரைதானே உம் குரல்? ஊர்ச்சந்தியில் உரத்து உளறுவது உமக்கு மட்டும் கேட்கவேண்டும் என்பதற்கா? டோண்டு ராகவனாய் சொல்லுவதற்கும், ராகவ ஐயங்காராய் சொல்லுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா.

"எம் கருத்து இஃது, யாரும் ஏற்றுக்கொள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எமக்கிலை" என்பீர்.

மதுவின் மயக்கதில் சாக்கடையில் தவறி விழுந்தவன் சந்தனத்தில் நீராடுவதாய் சொல்லுவதும் அவன் கருத்துத்தான். அவன் நம்புவதாலேயே அது உண்மையாகுமா?

நன்மை செயவே நான் நினைதேன் என்பீராயின்,

விட அறைக்குள் யூதர்களின் பிண அறை காணப் பணித்த நீதிபதியே தான் அவர்களுக்கு நன்மை செய்ததாகத்தான் நம்புவதாகக் கூறினான் - படித்திருப்பீர்.

பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே. வைணவனாய் இருப்பதைவிட தனிமனிதனாய் இருப்பதே சிறந்தது என்பது உம் வாதம் எனில், உமது முன்னோருக்கல்லவா இழுக்கு.

"கலப்பு மணத்தால் காழ்ப்புகள் உண்டு. நன்மைகளோடு, தீமைகளுமுண்டு. அவற்றை உரத்துச் சொல்லுவதை சாதி வெறி என்பீரோ?" என்றும் நீங்கள் கேட்கலாம்.

தொல்லைகள் இருப்பதாலேயே நன்மைகளை நசுக்கிவிடவேண்டுமா?

ஒரே குழுவுக்குள் உதிரம் சுழல வேண்டாம் என்றல்லவோ கோத்திரம் படைத்தனர் சாத்திரம் அறிந்தவர்கள். ஒரே குல மணத்தால் மனமும், உடலும் வலிமையுற்று குருடராய், முடவராய், பேதலித்த மனத்தோடு மாந்தருள் மாக்களாய் வாழும் மனிதர் எத்தனையோ எத்தனையோ. இவை தொடர்கதையாய் நீள விருப்பம் தெரிவிப்பது வீண் காத்திரம் அன்றோ.

கலப்பு மணத்தின் கனிகளை கண்டதுண்டா? சாதி சங்கிலிகளை தூளாக்கி மணம் புரிந்தவர்களின் மகவுகளைக் கொஞ்சியதுண்டா தாங்கள்? அத்தனை குழந்தைகளும் கல்வியின் தெய்வம் கலைவாணியின் சுவடிக் கீற்றுக்கள். மன வளத்திலும், உடல் பலத்திலும் பராசக்தியின் பார்வை பெற்றவர்கள். அறிவும், திறனும், வளமையும் கொண்ட அக்குழந்தைகளின் அகத்திற்கு அலைமகள் அன்னம் மீதேறி அவசரமாய் செல்வதை ஐயங்கார் என்ற பெயரில் அவமதிப்பது அஞ்ஞானத்தின் அவலமன்றோ.

அவரை இடிப்பதாய் நினைத்து வெற்று உரலையல்லவோ உருட்டுகிறீர்.

அன்பு கொண்டுவிட்டவள் முகம்மதிய வாரிசு என்று அழித்தா விட்டனர் வைணவர்கள்? அரங்கனுக்கு அருகில் துலுக்க நாச்சியாராய் துணை வைத்ததன்றோ நம் சமயம். அபச்சாரம் செய்துவிட்டீர் எனப் புரிந்து துலுக்க நாச்சியாரிடம் அபராதம் செய்வதன்றோ மனவலிமையின் அடையாளம். ஜெர்மானியர்களின் மனவலிமைக்கு உமது மனவலிமை குறைவுரலாகுமோ?

பார்ப்பான் நான் எனப் பகல்வதால் பற்றி எரியப்போவதென்ன? ஒன்றுமில்லை. கொங்கணனுக்காவது கொக்கிருந்தது.

"என் சாதி இதுவென இயம்புவதை எதிர்க்கிறார். அன்பற்று அழிக்கவும் துடிக்கிறார். இவர் முன் இறுமாந்திருப்பதற்கு இரும்பு இதயம் வேண்டும்" என்பீராயின் அது வெறும் பம்மாத்து என்பதை யாம் பகலவும் வேண்டுமோ? ஐயங்கார் என்று எடுத்தும்பியவது ஏளனத்திற்குரியதுதான் எல்லோர்தம் பார்வையிலும். முதியவரின் மீசைமுடியை முற்றிபோன கனவுக் கயிறுகளால் முறுக்கப்பெறும் முயற்சி என்பதுதான் தங்களை எள்ளாதவரின் எண்ணம். அற்றை இரவு அருந்திய கூழ் பட்டு மீசையை முறுக்கிய கதையை நீங்கள் சொல்லலாம். கூழ் குடித்த பெருமை உங்களுக்கு. குறை காணும் வாய்ப்பு மற்றோருக்கு.

தன் சாதி இதுவென்று கூறி தன் பலம் காட்டும் தரணியில் எம் சாதி இதுவென்பதில் நேர்வழி ஏற்றம் எதேனும் உண்டா?

முரட்டு முகம்மதியனும், கிருத்துவ ஆங்கிலேயனும் ஆளும் முன்பு சாதி என்பது நெகிழ்வு கொண்ட அமைப்பாய் நீண்டிருந்தது அறிவீரோ? பல்வேறு சாதிகளும் அவற்றுள் உயர்வு தாழ்வுகளும் ஆங்கிலேயர் ஆளுகையில் அவதரித்தன என்பதை அறிவீரோ?

விளக்கமாய் கேரளாவில் ஆரம்ப காலம் முதல் பிள்ளைகளும், நாயர்களும், நம்பியார்களும் திருமண பந்தம் கொள்பவராய் திகழ்வதை அறிவீரோ?

அநியாயக்காரர் இந்த ஆர் எஸ் எஸ் ஆட்கள்களென்பார் அறியாதது கலப்பு மணங்கள் காணும் குடும்பங்கள் அவருடையது என்பதே. மேடைகள் தோறும் சாதி இல்லை என்று கூப்பாட்டு போட்டு, சோடா குடிக்க தடையாய் உள்ளதென்று உதட்டு எச்சலோடு உன்னதத்தைத் துப்பி சாதி வோட்டுத் தேடும் சாக்கடை அஃறிணைகள் மத்தியில் தலைவர் முதல் தொண்டன் வரை கலப்புத் திருமணத்தை குடும்பதோடு கொண்டாடும் இவ்வமைப்பை இகழ்வதன்றோ இந்த இழிமனத்தார் விளையாட்டு.

குற்றப் பரம்பரையாய் ஆங்கிலக் கொள்ளையர் கூறிய வனஜாரி சாதியில் பிறந்த கோபினாத் முண்டே ஒரு மாநில முதல்வராவது ஈ வே ரா பிறந்த மண்ணில் என்றாவது நிகழுமோ? கோபினாத் முண்டேயை மணந்தது ஒரு பார்ப்பனப் பெண் என்பதறிவீரோ? இவர்களது கலப்பு மணத்தால் என்ன பிரச்சினை வந்தது?

காந்தி கிராமம் கண்ட பார்ப்பனப் பெண்ணின் கணவர் தலித் என்பதை அறிவீரோ? அங்கு சுயமாய் தொழில் செய்து வளமாவாய் வாழ்வோருக்கு இந்த கலப்பு மணத்தால் நேர்ந்த கடுமை என்னவோ?

அரசியல் மேதையாய் ராவும் பகலும் ஆராதனை செய்கிறீர்கள் ராஜாஜியை. அவர் தன் மகளை மணமுடித்தது வைசிய காந்தியின் மகனுக்கன்றோ?

கலப்புத் திருமணங்கள் கண்ட குறைகள்தான் என்ன?

ஆண்டாண்டு காலமாய் தன் உளுத்த உழக்கிற்குள் கிழக்கு, மேற்கு பார்த்து மணம் கொண்டவர்கள் சாதித்ததுதான் என்ன?

வாழும் முறைகளும், வாழ்வின் நோக்கங்களும் சாதி அடிப்படையைச் சாராது இருக்கும்போது ஒத்த வாழ்நெறியும், ஒன்றிற்கு மற்றொன்று உவமையாய் அமையும் நோக்கங்களும் கொண்டவர் கலந்தால் எதிர்த்து விண்டுவது டோண்டுவிற்குத் தகுமோ?

மனிதரை பார்ப்பனர், மற்றோர் என்று அரசியல் சதுரங்கத்தில் பகடையாய் உருட்டும் பொல்லா மாந்தரின் புன்சிரிப்பு உங்களை புளங்காகிதப்படுத்தலாம். பாரதத்தின் பலவீனம் நற்பெயர் தேடும் நாச ஆசைதான். கடமையை செய்யச் சொன்ன பரந்தாமன் பிறந்த நாட்டில், பிறப்பால் பெரியோர் இல்லை என்ற கீதை ஒலிக்கும் திருத்தலத்தில் நண்பர் போல் நாடுபவர் நாசத்திற்கு பூசை செய்வோர்; அன்பராய் இருத்தல் இயற்கையில் இதுவரை நடைபெறா வினோதம். அவர்கட்கு உம்மேல் இருப்பது வெறும் விரோதம். எனினும், நல்லவன் நீ எனும் நாமத்திற்கு மாந்தர் எதையும் செய்யத் துணிவதும் இயற்கையே. மண் உண்ட வாயினுள் மாயவன் காட்டிய மாநிலத்தில் உண்மையாயிருக்கும் மாயையிது.

வணங்கும் கைகளில் வாள் உண்டு.

ஆபிரகாமிய மதங்களால் சிவகாமியின் சிறார்கள் சீரழிக்கப்படுவதை அறிவீரா? இந்துவாய் இருப்பதாலேயே நரகம் விதித்தவற்றை நன்நூல்கள் என்போர் மத்தியில், நம் நூல்கள் அனைத்துப் பிரிவும் ஆதியைத் தேடுபவை என்பது அவமதிப்புப் பெறுவதை அறியீரோ?

மனித வளங்களை அழித்தாவது சுவனத்திற்கு சுற்றுலா போக விரும்புகிறார்கள். கிருத்துவை அண்டாதவர் கீழோர் என்பவர் வைப்பது சட்டமாகும் வையகத்தில்தான் உமது வாழ்க்கை. இயற்கையின் இயல்பை எதிர்த்து இன்பம் கொணருவோம் என்போரால் என்பாய் வாழ்க்கை முடிப்பவரோ எண்ணிலர்.

ஐயங்கார் எனச் சொல்லுவதில் இருக்கும் பாதுகாப்பும் சமூகப் பெருமையும் இந்து என்பதில் இல்லை என்பதை சமத்காரமாய் தாங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், இதை வெளிப்படையாய் சொன்னால் வாழ்க்கையை அழிப்பார் என்பதறிந்து குறுகிய பானையில் குதிரையோட்டுவதில் குன்றா பாதுகாப்பு இன்று மட்டும் உண்டுதான். ஐயங்கார் என்று சொல்லி குறுகிய வாழ்க்கை வாழ்வதைவிட இன்பம் நல்கும் இந்துவே நான் எனச் சொல்லுவதற்கு வீரமும், தீரமும், விவேகமும் வேண்டும்தான்.

உண்மை நாடி அச்சம் தவிர்த்து ஆண்மையோடு வாழ்பவர்களின் சந்ததியினரே இப்பூவில் வளமாய் வாழ்வார். இல்லையெனில், அச்சத்தோடு அறிவிலியாய் பூண்டோடு புழுத்து அழிவார். வாழ்க்கை சொல்லும் பாடம் இது.

8 comments:

தருமி said...

நல்ல தமிழ் விழலுக்கு இறைத்த நீராக ஆகக் கூடாதே என்று கவலையாயிருக்கிறது.

//தன்னுடைய கருத்து என்பதாலோ அல்லது இறுதி உண்மை என்று அறிவுறுத்தப்படுவதாலேயோ ஒன்றை அப்படியே விடாமல் நம்பவேண்டும் என்பதை தன்னம்பிக்கையின் அடையாளமாய், அறச்சீற்றமாய் காண்பிக்கும் ஆவலை மனிதர்களிடையே காணலாம்.// எனக்கும் பொருந்துவதாக எண்ணுகிறேன். தவறுதான்; திருத்திக் கொள்ளவேணும் ...

கொசு said...

அப்படிப் போடு தோஸ்து..

எவ்ளோ சொல்லி அவன் தலையில் சாணியைக் கரைத்து ஊத்தி செருப்பால் அடித்தாலும் திருந்தவே மாட்டான்!

சாகும்போது கூட அந்த நாய்க்கு ஜாதி வெறி இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

ஐயன் காளி அவர்களே,

பதிவு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் கவிதையாக தோன்றும் வரிகளின் சொல்லழகு என்னை கட்டிப் போட்டது.

//ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.//
ஆதிசேஷன் அம்சமாகிய ராமனுஜனை நான் சாடுவேனா? ஓம் நமோ நாராயணா என்று வாய் நிறைய அழைத்து அந்த மந்திரத்தை ஊரறிய பிரகடனம் செய்த அப்பெரியவரை நினைத்தாலே மோட்சப் பேறு கிட்டுமே. அவரைப் பற்றியும் வைணவ அமுதம் பற்றியும், ஹிந்து மஹா சமுத்திரம் பற்றியும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதே.

ஆனால் இங்கு நாம் பார்ப்பது கலப்பு மணம் பற்றியது. அதை பலரும் ஆதரிக்கின்றனர் மற்றவர்கள் விஷயத்தில். அதை ஆதரிப்பதே அரசியல் ரீதியாக சரியானதாகக் கருதப்படுகிறது. ஆனால் நான் கூறவருவது என்னவென்றால் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே.

//கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை?//
மன்னியுங்கள் ஐயா, இங்கு வந்து உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடுவதை விட பதிவாகவே போட்டு விட்டதை கூறவும், உங்கள் இந்தப் பதிவால் அதை போட மறந்த எனக்கு ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கூறவுமே நான் இங்கு வந்தேன். ஆனால் வந்த இடத்தில் இப்பதிவில் உள்ள அழகிய தமிழில் மனம் பறி கொடுத்ததில் அதை முதலில் கூற மறந்து விட்டேன். பாருங்கள் எனது பதிலை.

http://dondu.blogspot.com/2007/02/blog-post_07.html
ஐயன் காளி என்ற பெயரே கவிதை மயமாக இருக்கிறது.

நேரம் கிடைக்கும்போது அங்கு வந்து பார்த்து தங்கள் மேலான கருத்துக்களை கூறுமாறு நான், டோண்டு ராகவன் என்னும் பெயருடைய இந்த இளைஞன் வேண்டுகிறேன்.

இப்போது நான் ரசித்த உங்கள் வரிகளை பட்டியலிடுகிறேன்.

//தூணில் தோன்றிய நரசிம்மம் என்ன சாதியெனத் தெரிந்தா திரு மணந்தாள்?
வராகமாய் வளர்ந்து நின்ற அந்த வைணவன் என்ன சாதி?
தேவர்க்கு அமுது தர தன் தேகத்தைத் தந்த அந்த ஆமை என்ன சாதி?//

//பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே.//
பின்னுகிறீர்கள் ஐயா. தமிழ் உங்கள் விரல்களில் துள்ளி விளையாடுகிறது. உங்களது சொல்லாட்சி அபாரம். பொறாமையாக இருக்கிறது. நானும் உங்களுக்கு பதிலளித்துள்ள எனது பதிவில் உங்கள் நடைக்கு ஈடாக எழுத முயற்சி செய்துள்ளேன். வந்து படித்து அது பற்றிய கருத்தும் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

இன்னொரு விஷயம், நேற்று நான் எனது பதிவை அச்சிட்டபோது நள்ளிரவை தாண்டியிருந்தது. ஆகவே உடனே வந்து உங்களுக்கு நன்றி சொல்ல இயலவில்லை.

சூடிக்கொடுத்த சுடர்கொடி அன்னை ஆண்டாளை பற்றி நீங்கள் எழுதியதை படித்ததும்
"வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற வரிகள் என்னுள்ளத்தின் ஊடே செல்கின்றன. அதை நினைக்கும்போதே மனம் விம்முகிறது. அதை வாய்விட்டு கூற யத்தனிக்கும்போதெல்லாம் மனம் குதூகலிக்கிறது. ஆனந்த அழுகையால் குரல் குழறுகின்றது.

மீண்டும் நன்றி கூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

mika mika arumai!

Anonymous said...

கவிதை மயக்கும் உங்கள் தமிழுக்கு அடிமையானேன் காளி ஐயா.

டோண்டு இதை நல்ல முறையில் எடுத்துக்கொண்டிருக்கிறார் என தெரிகிறது. நீங்கள் எழுதியபடி அவர் செயல்படுவார் என நிச்சயம் நம்புகிறேன்.அவரது பின்னூட்டத்துக்கு நீங்கள் அளிக்க இருக்கும் பதிலையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

Anonymous said...

வணக்கம் உங்கள் தமிழுக்கும் கருத்துக்கும்.
நன்றி.

ஓகை said...

அருமையான நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரை, இந்தப் பதிவுக்கு என் நன்றிகள் பல.

// முரட்டு முகம்மதியனும், கிருத்துவ ஆங்கிலேயனும் ஆளும் முன்பு சாதி என்பது நெகிழ்வு கொண்ட அமைப்பாய் நீண்டிருந்தது அறிவீரோ? பல்வேறு சாதிகளும் அவற்றுள் உயர்வு தாழ்வுகளும் ஆங்கிலேயர் ஆளுகையில் அவதரித்தன என்பதை அறிவீரோ? //

இந்த கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன். பதிவு முழுவதிலும் உள்ள பல கருத்துகளுடன் உடனடியாக உடன்பட முடிகிறது. சிலவற்றுக்கு விவாதம் தேவை.

நம் நாட்டின் எல்லா பிரச்சனைகளும் ஒழிய 'எல்லோருக்கும் கல்வி மற்றும் கலப்புத் திருமணங்கள் மட்டுமே' என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

Anonymous said...

Aravindan Neelakatan - Are you the writer of this blog post.I find too many similarities in views.
You write in a new style but
the substance reamins the same.
Hence I have this doubt.